சுவிட்சர்லாந்து தனது வெளிநாட்டுச் செலவினங்களைக் குறைக்கும் நோக்கத்தால் தூதரக அலுவலகங்களையும், அலுவலர்களையும் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.இதன் காரணமாக அமெரிக்கா, கனடாவில் உள்ள தூதரகங்களிலும் மாற்றம் வரப்போகின்றது.
செலவினங்களைக் குறைக்கும் திட்டத்தின் கீழ் நாடாளுமன்றம், பல முடிவுகளை அறிவித்துள்ளது. இதன்படி சிகாகோவிலும் டொரொண்டோவிலும் இருக்கும் தூதரகங்கள் மூடப்படும்.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தூதரகத்தின் செலவினங்கள் குறைக்கப்படும். நியூயோர்க்கில் உள்ள இரண்டு தனித்தனி தூதரகங்களும் எதிர்வரும் 2014ம் ஆண்டுக்குள் ஒன்றிணைக்கப்படும்.
இனி மேற்கொண்டு தூதரகச் செலவுகள் குறைக்கப்படமாட்டாது என்றும் இதுவே இறுதியானது என்று வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி ஜெர்ஹார்ட் புரூகெர் தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்தின் செலவுக் குறைப்புத் திட்டத்தினால் இலத்தீன் அமெரிக்காவில் குறிப்பாக கவுதமாலா, ஹவானா, லா பாஸ் போன்ற ஊர்களில் உள்ள தூதரகங்களும் பாதிப்படைகின்றன.
கிழக்கு ஐரோப்பா, வளைகுடாப்பகுதி மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள தூதரகங்கள் சிலவும் மூடு விழா காணலாம்.
இந்தத் தூதரகங்களை மூடினாலும் அந்த நாடுகளில் வாழும் சுவிஸ் குடிமக்களுக்கு உதவும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்படும். இருபத்தி நான்கு மணிநேர அலைபேசி வசதியும் உடனடி சேவையும் உறுதி செய்யப்படும்.
மியான்மரிலும், கிர்கிஸ்தானிலும் புதிய தூதரகங்கள் அமைக்கப்படும்.
செலவினக் குறைப்பு சுவிஸ்ஸோடு மட்டும் நின்றுவிடவில்லை, மற்ற ஐரோப்பிய நாடுகளும் தூதரகங்களைக் குறைக்கத் திட்டமிட்டு வருகின்றன. |